Monday, August 28, 2017

மெய்ப்பொருள் பொருள் காண்பது அறிவு

நாடகம்
"மெய்ப்பொருள் பொருள் காண்பது அறிவு"






மொத்தம் : அய்வர்


கருப்பொருள் : கேள்விகள் , விவாத மேடை, விவாத அரங்கம், தமிழ் மொழி சிறப்பு


பங்குபெறுவோர் : புத்தன், யாழினி, ஶ்ரீராம்,௮க்‌ஷரா


நெறியாளர் : திருவள்ளுவர்


தலைப்பு : தொன்மையான மொழி தமிழா ? சமஸ்கிருதமா ?


உடை : திருவள்ளுவர் with coat suit


உடை நிறம் :
புத்தன் - Black
யாழினி - Pink
ஶ்ரீராம் - Orange
அக்‌ஷரா - Yellow


பொருள்கள்:
  1. Thiruvalluvar Beard
  2. Back ground banner - சிந்து சமவெளி நாகரிகம்
  3. Hollow rectangle depicting TV
திருவள்ளுவர் : அனைவருக்கும் வணக்கம்! இது தமிழர் தொலைக்காட்சி வழங்கும், "மெய்ப்பொருள் பொருள் காண்பது அறிவு" நிகழ்ச்சி.  இந்த நிகழ்வில் ஒருமுக்கியமான தலைப்பை பற்றி விவாதிக்க இருக்கிறோம். இது ஒரு பரபரப்பான சூடான விவாதமாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை. ஆம்! நாம்விவாதிக்க இருப்பது, நம் ‘இனம்’ சார்ந்தது, நம் ‘மொழி’ சார்ந்தது, நம் ‘பண்பாடு’ சார்ந்தது, ‘அறிவியல்’ சார்ந்தது. நாம் விவாதிக்க இருக்கும், மிக முக்கிய தலைப்பு, "தொன்மையான மொழி ? தமிழா ? ஜம்ஷுகிரதமா? மன்னிக்கவும் - சமஸ்கிருதமா 😂? அறிவியல்ஆதாரங்கள் என்ன ?" விவாதிப்போம்! நம்மோடு நான்கு ஆளுமைகள் இணைகிறார்கள். திரு. புத்தன், திருமிகு. யாழினி, திரு. ஶ்ரீராம், திருமிகு. ௮க்‌ஷரா


[ திருவள்ளுவர் அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். அனைவரும் திருவள்ளுவருக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர் ]


திருவள்ளுவர் : முதலில் திரு. ஶ்ரீராமிடம் கேட்போம், தொன்மையான மொழி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள் ? ஏன் ?


ஶ்ரீராம் : நீங்க பாத்தீங்கன்னா, இந்த லோகத்திலேயே சிறந்த பாஷை…… தொன்மையான பாஷை…… சமஸ்கிருதம்தான். ஏன்னா சமஸ்கிருதம் பல்லாயிரம் பல்லாயிரம் யுகமா இருக்கு. அதுலயும் சமஸ்கிருதம் தேவ பாஷையாக்கும். ஆங்...


திருவள்ளுவர் : அடுத்து, திருமிகு.யாழினியிடம் கேட்போம். உங்கள் கருத்து என்ன யாழினி அவர்களே? தொன்மையான மொழி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள் ? ஏன் ?


யாழினி : நிச்சயம் தமிழ்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மொழி தமிழ். தமிழ் தேவ பாஷை அல்ல. நிச்சயமாக மக்கள் மொழி.


திருவள்ளுவர் : அடுத்து, திருமிகு. அக்‌ஷராவிடம் கேட்போம். உங்கள் கருத்து என்ன? அக்‌ஷரா அவர்களே. தொன்மையான மொழி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள் ? ஏன் ?


௮க்‌ஷரா : லோகம் சிருஷ்டிக்கப் பட்டவே, சமஸ்கிருதம் படைக்கப் பட்டதா பெரியவா…… சொல்றா. அதனால தொன்மையான மொழி சமஸ்கிருதமே.


திருவள்ளுவர் : அடுத்து, திரு.புத்தனிடம் கேட்போம். உங்கள் கருத்து என்ன? புத்தன் அவர்களே. தொன்மையான மொழி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள் ?ஏன் ?


புத்தன் : நிச்சயம் தமிழ்தான். ஏனெனில் உலகம் உருவாகி, உயிர் உருவாகி, மனிதர் உருவாகி, ஒலி உருவாகி, ஒலியே கருவாகி, பல்கி பெருகி இயற்கையாய் பரிணாமம் அடைந்த மொழி 'தமிழ்' என்று தமிழ்ச் சான்றோர் கூறுகின்றனர். ஆகையால் தமிழ் மொழியே தொன்மையான மொழி.


திருவள்ளுவர் : மிகவும் சுவாரசியமான வாதங்களை எடுத்து வைத்துள்ளார்கள். விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம். சரி, உணர்வின் அடிப்படையில் கருத்து பகிர்ந்தீர்கள். அடுத்து மொழியியலில் சில கருத்தை இந்த சுற்றில் கூறுங்கள். தொன்மையான சில சொற்கள் கூறி அதன் வேர்ச்சொல்லை சொல்லுங்கள் திரு.ஶ்ரீராம்


ஶ்ரீராம் : உதாரணமாக “லோகம்” அப்டிங்கற சமஸ்கிருத சொல்லில் இருந்தே “உலகம்” அப்படிங்கற தமிழ் சொல் வந்தது. மறுக்க முடியுமா ?


புத்தன் : ஏன் முடியாது ? “லோகம்” அப்டிங்கற சமஸ்கிருத சொல்லுக்கு வேர் சொல் என்ன ?


ஶ்ரீராம் : அது வந்து வந்து வந்து …….. ( தலையை சொறிகிறார் )


புத்தன் : அது என்னங்க வந்து போயின்னு இ..........ழுவை? தமிழில் “உலகம்” எனும் சொல்லுக்கு "உல்", “உலம்” அப்படின்னு வேர்ச் சொற்கள் இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? இல்லையே.


உல் - உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல்.
உலக்கை = உருண்டு நீண்ட பெருந்தடி.
உலண்டு = உருண்டு நீண்ட புழு.
உலம் - உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல்.


ஶ்ரீராம் : அது…. அது…. ( முழிக்கிறார் )


யாழினி : அது சரி “நாவாய்” அப்படிங்கிற தமிழ் சொல் சமஸ்கிருத சொல்லா தமிழ் சொல்லா ?


௮க்‌ஷரா : சந்தேகம் என்ன ? சமஸ்கிருத சொல்தான். சமஸ்கிரத மொழியிலேந்துதான் தமிழ் மொழியே வந்தது. அப்ப நாவாய் சமஸ்கிருத சொல்தானே! ( தலையை குதூகலத்தில் ஆட்டுகிறார் )


யாழினி : அதான் இல்லை. சமஸ்கிருத கலாச்சாரத்தில் கடல் பிரயாணம் செல்வதே பாவம். அதாவது ‘தோஷம்’. ஆனால் தமிழர்கள் கடலோடிகள். கப்பலில் கடல் கடந்து வாணிபம் செய்துள்ளார்கள். கடல் கடந்து நாடுகளை வாகை சூடி உள்ளனர். கட்டுமரம் அப்படிங்கற சொல்லிலே இருந்தே catamaran அப்படிங்கற ஆங்கில சொல்லே வந்துள்ளது. நாவாய் என்கிற தமிழ் சொல்லில் இருந்தே NAVY என்று ஆங்கிலத்தில் வந்துள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர்? ( கை விரல்களை விரித்து கேள்வி கேட்கிறார் )


திருவள்ளுவர் : பலே பலே !! விவாதம் சூடு பிடிக்கிறது. சரி தொல்லியற் துறையை தொட்டு பார்ப்போம். தொல்லியற் ஆதாரம் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் எவ்வளவு இருக்கிறது ?


ஶ்ரீராம் : சமஸ்கிருத இலக்கியங்கள் மிக தொன்மையானவை. பல செப்பேடுகள் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் இருப்பதாக சொல்வதாக நம்புவதாக கூறினார்கள் ?
புத்தன் : யார் கூறினார்கள் ? ( கையால் கேள்வி கேட்கிறார் )


ஶ்ரீராம் ; அது…..  ( முழித்துக் கொண்டே ) யாரோ ?


புத்தன் : இந்தியாவில் இது வரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் கல்வெட்டுகளில் 60 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் என தொல்லியல் துறையே சொல்கிறது. அப்ப பாருங்கள் தமிழ் மொழியின் தொல்லியல் சான்று எவ்வளவு இருக்கிறது என்று. அது மட்டுமா !


திருவள்ளுவர் : ஓ ! இன்னும் தொல்லியல் சான்றுகள் வேறு இருக்கிறதா ?


புத்தன் : ஆமாம். உலகத்தின் தலை சிறந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆன திரு. அஸ்கோ பார்ப்பொலோ, சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றும், சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள், தமிழ் என்றும் அறிவியல் சான்றுகளுடன் நிறுவி உள்ளார். அது மட்டுமா, ஈழத்தில், தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில், பூம்புகாரில், மிக சமீபத்தில் கீழடி எனும் ஒரு ஊரையும் அகழ்வாய்வில் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு சமஸ்கிருத சான்றுகள உள்ள ஊர்கள் அகழ்வாய்வில் எங்காவது கண்டு பிடிக்க பட்டுள்ளதா? அதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளதா ?


ஶ்ரீராம் : அஅஅஅ..... து ( தடுமாறுகிறார்)


௮க்‌ஷரா : சமஸ்கிருதத்தில் பல சுவையான இலக்கிய சாரம் இருக்கிறது.


யாழினி : தமிழிலே இலக்கிய சாரம் என்றால் எவ்வளவோ இருக்கிறது. எடுத்து காட்டுக்கு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' , 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'மெய் பொருள் காண்பது அறிவு' போன்ற இலக்கிய சுவை மற்றும், மானுட மான்புகள் உள்ளன. இவற்றிற்கு இணையான அல்லது இதைகாட்டிலும் சிறந்த கருத்துகள் சமஸ்கிருதத்தில் உள்ளனவா ?


௮க்‌ஷரா : அ......து ( விழிக்கிறார். யோசிக்கிறார் )


ஶ்ரீராம் : அது சரி. அதெல்லாம் இருக்கட்டும் … பெரும்பாலான தமிழர்கள் ஏன் தங்களின் வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும், அதாவது திருமண சடங்கு, வீட்டு மனை பூஜை, கிரகபிரவேச பூஜை, கோவிலில் பூஜை, சொல்லப் போனால், ஏன் இறந்த பிறகு, திதி கொடுப்பதையும் தாய்மொழி தமிழில் செய்கிறார்களா? அல்லது சமஸ்கிருதத்தில் செய்கிறார்களா ? சொல்லுங்கள் பார்ப்போம்.


புத்தன் : அது என்னவோ உண்மைதான். அது சில தமிழரின் அறியாமை. அறியாமை நிலையானது அல்ல. 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று உணரும் போது, ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதை உணரும் போது, நிலைமை மாறும், சுயமரியாதையும் பகுத்தறிவும் நிறைந்த மகிழ்ச்சியான தமிழ்ச் சமூகம் நிச்சயம் உருவாகும்.


புத்தன் + யாழினி : இது உறுதி ! உறுதி !!! ( உரத்த குரலில் )
திருவள்ளுவர் : மிக நல்ல ஆரோக்கியமான ஆழமான உணர்வு பூர்வமான, அறிவியல் சான்றுகளுடன் கூடிய விவாதம். தமிழ் செம்மொழி ஆகும். ஒரு மொழி செம்மொழியாக தூய்மை, தாய்மை, இளமை, தொன்மை என பல காரணிகள் உண்டு.  செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே அனைத்து செம்மொழி தகுதிகளும் இருப்பதாகவும் மொழி இயல் அறிஞர்களே கூறுகிறார்கள். அப்படிப்பட்ட உயர்தனி செம்மொழி தமிழ் மொழி பற்றி பல செய்திகள் மற்றும் பல்வேறு பார்வைகளை அறிவியல் துணை கொண்டு பார்த்தோம். மீண்டும் இன்னொரு அமர்வில் வேறு ஒரு தலைப்பில் விவாதிப்போம். இது தமிழர் தொலைக்காட்சி வழங்கும், "மெய்ப்பொருள் பொருள் காண்பது அறிவு”.


எட்டு திக்கும் எட்டட்டும் பகுத்தறிவு !


திருவள்ளுவர் + புத்தன் + யாழினி + ஶ்ரீராம் + ௮க்‌ஷரா : வாழ்க தமிழ். ( அனைவரும் உரத்தக் குரலில் )


திருவள்ளுவர் + புத்தன் + யாழினி + ஶ்ரீராம் + ௮க்‌ஷரா : வளர்க தமிழர். ( அனைவரும் உரத்தக் குரலில் )

[ பின்னனி இசை பாடப்படுகிறது: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' ]

No comments:

Post a Comment