Sunday, August 27, 2017

வாழ்விணைப்பு விழா

வாழ்விணையர்கள் :
ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து
ஸ்னேஹா ஹரிஷ்
வாழ்விணைப்பு விழா
நாள் : 24.08.2011
இடம் : தஞ்சாவூர்

நண்பர்களே - உறவினர்களே,
வணக்கம்.

24 ஆம் தேதி (24.08.2011), தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், முனைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில், எங்கள் வாழ்விணைப்பு விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

தந்தை பெரியாரின் தாக்கம் 'விடுதலை' நாளேட்டின் வாயிலாகவும், 'உண்மை' வார இதழின் வாயிலாகவும், 'பெரியார்' வலைக்காட்சி வாயிலாகவும், பெறாமலிருந்தால்?


என்ன ஆகி இருக்கும்?


பெறாமலிருந்தால், இந்து மதத்தின் மனுதர்ம வர்ணாஸ்ரம ஜாதிய படிக்கட்டில் ஒருவர் என்பது நிலை நிறுத்தப்பட்டிருக்கும். பிறப்பால் ஒருவர் உயர்வு - மற்றவர் தாழ்வு; என்பவற்றை ஒப்புக்கொள்ள நேரிட்டு இருக்கும். ஜாதியால், பார்ப்பனரல்லாத மக்கள், 'சாஸ்திரம்' 'சடங்கு' 'சம்பிரதாயம்' 'பழக்கம் வழக்கம்' போன்றவற்றால், "தாசி மக்கள் - வேசி மக்கள் - அடிமை - கல்வி அறிவு பெறக்கூடாதவர் - சுயமரியாதை அற்றவர்" போன்ற இழிவுகளையும் மூட நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கும்.


தந்தை பெரியாரின் தாக்கம் வந்த பிறகு, இப்படிப் பட்ட இழிவுகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்டே ஆக வேண்டும் என்ற உறுதி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.
மேலும், இப்படிப்பட்ட சீர்திருத்த சுயமரியாதைத் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்த போதும், உறுதி மென்மேலும் கெட்டிப்பட்டதே அன்றி, உறுதி விட்டுப் போய்விடவில்லை.

காரணம்? தந்தை பெரியார்!

நடந்தால் சீர்திருத்த சுயமரியாதைத் திருமணம்;இல்லையேல், திருமணமே இல்லை என்ற நிலைதான் இருந்தது.



உண்மைகள் முதலில் கசக்கும், பிறகே இனிக்கும்;
அதுபோல,
பெரியார் கொள்கைகள் முதலில் கசக்கும், பிறகே இனிக்கும்;
ஏனென்றால்?
பெரியார் கொள்கைகள் உண்மையை அடித்தளமாகக் கொண்டது !



தந்தை பெரியார் என்ற அந்த ஒற்றை மனிதர் மட்டும் பிறவாதிருந்தால், கல்வியால் இன்று நம்மில் பலர் ஆராய்ச்சியாளராக (Scientist), ஆட்சியாளராக (Administrator), மருத்துவராக (Doctor), பொறியாளராக (Engineer), ஆசிரியராக (Teacher), இன்னும் மேற்படி மேற்படியாக எல்லாம் ஆகி இருக்க முடியுமா?

தந்தை பெரியாரின் ஒரே பற்று - மனிதப் பற்று. அப்படிப்பட்ட மனிதப் பற்றுக்கு எதிராக ஜாதி, மதம், கடவுள், வர்ணாஸ்ரம தர்மம், ஸனாதன தர்மம், மொழி, இனம், நாடு என்று எவை இருந்தாலும் அவற்றைத் துணிந்து எதிர்த்த உன்னத நேர்மையாளர்.


பிறப்பால் அனைவரும் சமம் :
இந்து முறைப்படியான திருமணத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் தீமை என்னவெனில், பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும், பார்ப்பனர் அல்லாதவர் தாழ்ந்தவர் என்ற நிலையை ஒப்புக் கொள்ள - ஏற்றுக் கொள்ள நேரிடும். பிறப்பால் யாரும் உயர்வும் இல்லை - தாழ்வும் இல்லை; பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான் திராவிடர் பண்பாடு.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் - திருக்குறள் 972
[
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ]





பழியில்லா இழிவில்லா வாழ்க்கை :
இந்து முறைப்படியான திருமணத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் தீமை என்னவெனில், அந்நிய மொழியான சமஸ்கிருதத்தில், யாரும் அறிந்திராத, அறிந்தாலும் புரிந்திராத, சிறிதும் பிரயோசனமற்ற மந்திரங்களை கற்பனையான உயர் ஜாதியினரான பார்ப்பனர் ஓத; அவற்றை, அறியாமலும் புரியாமலும் ஏற்றுக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நிலையைத்தான் அடைய இயலும்.



எப்படியோ, அந்த கற்பனையான உயர் ஜாதியினரான பார்ப்பனர் கூறும் வேத மந்திரம் புரிய ஆரம்பித்தால்? அதற்கும் மேல், ஒருவர் அந்த சமஸ்கிருத வேத மந்திரத்தை ஏற்றுக் கொண்டால், ஏமாந்ததோடு அல்லாமல், இழிவை ஏற்க நேரிடும், சுயமரியாதையையும் இழக்க நேரிடும்.



இந்து முறைப்படி, கற்பனையான உயர் ஜாதியினரான பார்ப்பனர் கூறும் சமஸ்கிருத மந்திரம் இதுதான் :


Version:1.0 StartHTML:0000000167 EndHTML:0000027713 StartFragment:0000000514 EndFragment:0000027697

சமஸ்கிருத மந்திரம்
சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்

ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.


ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.


ஸோமோ ()தத் கந்தர் வாய
கந்தர்வோ ()தத் அக்நயே
ரயிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்


சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான்.
கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான்.
அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.



உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ
நம ஸேடா மஸேத்வா
அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும்
ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ

விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.



உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா
விஷ்வா வஸீந் நமஸ
கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச
பித்ரு பதம வ்யக் தாகும்
ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி




இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.





இந்தப் பொருளில் உள்ள சமஸ்கிருத மந்திரத்தை, பல பேர் கூடி இருக்கிற ஒரு கூட்டத்தில் சொல்லி விட்டு போக முடிகிறது என்றால் அதன் பொருள் என்ன? பார்ப்பனர் ஏமாற்றுகிறார்கள். ஏமாறுவதற்கு பார்ப்பனர் அல்லாதோர் இருக்கிறார்கள் என்பதுதானே பொருள்? பார்ப்பனர் இழிவை ஏற்றுகிறார்: இழிவை ஏற்றுக் கொள்ள பார்ப்பனர் அல்லாதார் இருக்கிறார்கள் என்பதுதானே பொருள்?
இப்படிப்பட்ட பழியையும் இழிவையும் சுமக்கலாமா?

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். - திருக்குறள் 240
[
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான். ]

சமூகமே சாட்சி :
இந்து மதத்தின் திருமண முறையில், அக்னி சாட்சியாகத் திருமணம் நடைபெறுகிறது. அது என்ன அக்னி சாட்சி? இந்து மதத்தின் திருமண முறையை ஏற்றுக் கொண்டால், உயிரற்ற ஜடப் பொருளான 'அக்னி' சாட்சியாக திருமணம் நடைபெறுகிறது எனும் மூட நம்பிக்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?



வாழ்விணைப்பு விழாவிற்கு, சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மூத்தோர், பெற்றோர், கற்றறிந்த பெரியோர், உற்றார், உறவினர், நண்பர் வந்திருக்கறீர்கள். உங்கள் அனைவரின் சாட்சியை விடவா, ஜடப் பொருளான 'அக்னி' சாட்சி பெரிய சாட்சி?

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். - திருக்குறள் 441
[
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ]

இம்மியும் ஏற்புடையதல்ல அம்மி மிதித்தல் :
கௌதம முனிவரின் மனைவி அகலிகை. கற்பனையான புராணப்படி, அகலிகையும் இந்திரனும் சல்லாபம் செய்ததை அறிந்து, முனிவர் விட்ட சாபத்தால், அகலிகை கல் ஆக்கப்பட்டாராம். அந்த இழிவான கற்பனைக் கதையை நினைவூட்டவே, திருமணம் செய்யவிருக்கும் பெண் அம்மி மிதிப்பதை சடங்காக மாற்றி வைத்து இருக்கிறார்கள்.
அகலிகை-இந்திரன் எனும் கற்பனை கதாபாத்திரம் செய்த ஒழுங்கீனத்தை முன்னிலைப் படுத்தியா, பெண்களை அம்மி மிதிக்கச் செய்வது? அப்படி என்றால், ஆண்களுக்கு அந்த சடங்கு இல்லையா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
நி
ற்
ஒழுக்கம் எனும் பன்பு, ஆண் பெண் இருவருக்கும் சமமன்றோ? இப்படிப்பட்ட இழிவு நிரம்பிய சடங்கு இன்றும் தேவையா என்று சற்றேனும் யோசித்துப் பார்க்க வேண்டாமா?



ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். - திருக்குறள் 131
[ ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ]



தேவை இல்லாத சங்கதி - அருந்ததி :
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி. கற்பனையான புராணப்படி, வசிஷ்டரும் - அருந்ததியும் இணை பிரியாத தம்பதியர்களாம். அப்படிப்பட்ட தம்பதியரில், ஒருவரான அருந்ததி எனும் நட்சத்திரத்தை, மணமக்கள் பார்க்க வேண்டும் எனும் சடங்கை நடத்துகிறார்கள். பகல் வேளையில், கொழுத்தும் வெயிலில் வானத்தைப் பார்த்தால், மனிதர்களின் கண்களுக்கு நட்சத்திரம் தெரியுமா? அப்படித் தெரியாத போதும், 'தெரிகிறது' என்று சொல்லச் சொன்னால், பொய் சொல்லத் தூண்டுவது போல் ஆகாதா ?

இந்த மூட சாஸ்திரத்தை விட்டு விடுவோம். நமக்கு அருகில் இருக்கும் மூத்தோர், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர் ஆகியோரிடம் இருந்து நேரடியாக கண்கூடாக கற்றறிய - நல்லவை எண்ணற்றவை இருக்கையில், இப்படித் தேவை இல்லாத சங்கதியான அருந்ததி எங்கிருந்து வந்தது? எங்கிருந்தோ வந்து தொலையட்டும். ஆனாலும், அந்த மூடப் பழக்க வழக்கங்கள் இனியாவது வெந்துத் தொலையட்டும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. - திருக்குறள் 299
[
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். ]


சாதகம் அல்ல ஜாதகம் :
மனப் பொருத்தம் இல்லாத மணமக்களிடம், என்னதான் ஜாதகப் பொருத்தம் எனும் கற்பனை ஒத்து இருந்தும், வாழ்க்கை இனிமையாய் அமைய முடியுமா? கற்பனையான ஜாதகத்தில் கோள்கள் சாதகமாக இருக்கிறதோ இல்லையோ, அந்த மூட நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் - ஏமாற்றுவதற்கு இன்று கூட இருக்கிறார்களே! ஏமாற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்றால், ஏமாறுபவர்கள் இனி ஏமாறாமல் இருக்க வேண்டும் அல்லவா?

மனமும் குணமும் ஒத்துப் போவதைக் காட்டிலுமா, ராசியும் நட்சத்திரமும் ஒத்துப் போவது சிறந்தது?

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. - திருக்குறள் 73
[ உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். ]


வேலி போடும் தாலி :
தாலி கட்டுவது என்பது பெண்ணுக்கு இருக்கிறது . அது போல ஆணுக்கு என்ன இருக்கிறது? பெண் தாலி அணிவதால், தான் ஓர் அடிமை என்கிற உணர்ச்சியைப் பெறத்தான் உதவுகிறது. அப்படிப்பட்ட உணர்ச்சித் தர வைக்கும் தாலி கட்டாமல் நடத்தப் பெறுவதுதான் பூரண சுயமரியாதைத் திருமணம்.



கேள்வி - பதில் நேரம் :
பார்ப்பனர் இல்லாத திருமணம் நடத்தக் காரணம்?
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிலை நாட்ட.

சமஸ்கிருத மந்திரம் ஓதாமல் திருமணம் நடத்தக் காரணம்?
புரியாத அந்நிய மொழியான சமஸ்கிருததைத் தவிர்த்து, தாய் மொழியான உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் வாழ்விணைப்பு விழாவை நடத்த.

சமஸ்கிருத மந்திரத்தை எதிர்ப்பதர்க்குக் காரணம்?
இழிவை ஏற்படுத்தும் பொருள் கொண்ட மந்திரங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக.

அக்னி சாட்சியாக திருமணம் நடைபெறாமல் இருக்கக் காரணம்?
மூத்தோர், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர் போன்றோர் சாட்சியாகத் திருமணம் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்வதற்கு.

அம்மி மிதிக்காமல் திருமணம் நடைபெறுகிறதே?
மணப்பெண்ணுக்கு இழிவை ஏற்படுத்தும் சடங்கைத் தவிர்க்க.

அருந்ததி நட்சத்திரம் பார்க்காமல் திருமணம் நடைபெறக் காரணம்?
மணமக்கள், பார்த்து தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் கற்றறிந்துக் கொள்ளவும் எண்ணற்றோர் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பதை நிலை நாட்ட.

தாலி கட்டுவதைத் தவிர்ப்பது?
பெண் அடிமை அல்ல என்பதைப் பறைசாற்ற.

சுயமரியாதைத் திருமணம்?
பிறப்பால் அனைவரும் சமம், ஆண் பெண் இருவரும் சமம்; மூட நம்பிக்கைகள் இல்லாத; கண்மூடிப் பழக்க வழக்கம் இல்லாத; இழிவான சாஸ்திர சம்பிரதாயம் இல்லாத; அந்நிய மொழிக் கலப்பில்லாமல்; ஜாதியை நிலை நாட்டும் சடங்குகள் இல்லாத; ஜாதியை ஒழித்துக் கட்டி சமத்துவ சமுதாயம் அடைய ஒரு முன்னேற்றமாகத்தான் சீர்திருத்தச் சுயமரியாதைத் திருமணம் !



கூறிய கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள்; ஏற்றுக் கொள்வன இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏற்றுக் கொள்வன இல்லை என்றால், எது சமுதாயத்துக்கு சிறந்தது என்றாவது சிந்தித்துப் பாருங்கள் !


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. - திருக்குறள் 423
[
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும, அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும. ]

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள் 355
[
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல, அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும. ]

தந்தை பெரியார் வழியில் சீர்திருத்த சுயமரியாதைத் திருமணம் செய்வதால, நம் ஆண்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் இழிவையும, நம் பெண்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் களங்கத்தையும் போக், ஒரு ஆக்கப்பூர்வமான காரியம் செய்கிற மன நிறைவோடு
......


உண்மையுடன்
ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து
ஸ்னேஹா ஹரிஷ்
harishkm2k@gmail.com : மின்னஞ்சல்
http://www.facebook.com/profile.php?id=672849997 : முகநூல்
http://dravidaselvan.blogspot.com/ : வலைப்பூ
http://dravidaselvan.wordpress.com/
http://ponniyinselvan-katturai.blogspot.com/


கருத்து ஆக்கத்திற்கு உதவிய நூல் :
வாழ்க்கைத் துணைநலம் - தந்தை பெரியார்
சுயமரியாதைத் திருமணம் ஏன்? - தந்தை பெரியார்
சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் - கி.வீரமணி

நன்றி :
தந்தை பெரியார்
தமிழர் தலைவர் கி.வீரமணி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

விளக்கம் :
மனு தர்மம் / மனு ஸ்ம்ருதி / மனு நீதி - இந்து மதத்தின் சட்ட புத்தகம்.
வர்ணாஸ்ரம தர்மம் - மனு தர்மத்தின் படி, மனிதர்கள் நான்கு வர்ணமாக வகுக்கப்பட்டு இருக்கிறார்கள்
1) ப்ராமணர்
2) ஷத்ரியர்
3) வைஷ்யர்
4) சூத்திரர்
ஸனாதன தர்மம் - மனு தர்மத்தின் படி, ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் வகுக்கப்பட்ட தொழிலையே செய்ய வேண்டும்.
பார்ப்பனர் - ப்ராமணர். பிராமணரை 'பார்ப்பனர்' என்று அழைப்பது 'சூத்திரர்' எனும் இழிவு போக்க.
சூத்திரர் - மனு தர்மத்தின் படி, ப்ராமணருக்கு அடிமைத் தொழில் செய்ய வேண்டியவர்.
ப்ராமணருக்கு தாசி-வேசி புத்திரர்கள்.

No comments:

Post a Comment